Thursday, May 10, 2012

மோத்திரக் கல்


‘ஒரு மாதிரியாக வெளியில வந்திற்று’

பத்து மாதம் பக்குவமாய் சுமந்து பெற்றதைப் போல பூரிப்புடன் வாசலில் நின்று கொண்டிருந்த லசந்தவின் கையில் சிறிய காகிதத் துண்டின் மேல் இருந்தது அது.

டேவிட் அவற்றை ஏறெடுத்தும் பார்க்கவில்லை, நான் ஏனோ நானாகவே மூக்கை நுழைத்துக் கொண்டேன்.

‘என்ன இது’ - நான்

”Calcium Oxalate - கல்சியம் ஒக்ஸ்சலேட் - நீர் ஏஎல்ல என்ன பாடம் செய்த நீர்? நான் பயோ, சோலஜி B மற்ற தெல்லாம் S. பிறகு தான் ITக்கு வந்தனான். விளங்கிற மாதிரி சொன்னா - மூத்திரக் கல்.”

மூக்கை நுழைத்ததற்கு வருந்திக் கொண்டாலும், முகர்ந்து பார்க்காததற்கு மகிழ்ந்து கொண்டேன்.

சரி எப்படிக் கண்டு பிடித்தாய்?

நிண்டு கொண்டு ‘இருக்கேக்க’ - உள்ளுக்குள்ள இருந்து கல்லு வெளியில வரும் உணர்வு தெரியும் - டக்கெண்டு கைதுடைக்கிற பேப்பற போட்டு..

"அட நான் அதைக் கேட்கவில்லை, இது மூத்திரக் கல் தான் என எப்படித் தெரியும்?"

'இது நாலாவது முறை மச்சான் (சிங்களவருக்கும் நமீதாவிற்கும் முதலில் தெரியும் தமில் சொல் மச்சான் தான்) போன முறை கலியான வீட்டுக்கு நாலு நாளைக்கு முதல் வந்தது, 0.6 mm . இது இன்னமும் பெரிசு போல' என்றான் லசந்த கல்லை உற்றுப் பார்த்தவாறே.

நல்ல வேளை, அது முன்னதாகவே வெளியேறி விட்டது. இல்லாட்டி நங்கி பாவம் என நான் நினைத்துக் கொண்டேன்.

தண்ணி நிறையக் குடிக்கோணும்.. அதுதான் இதுக்கு நல்ல மருந்து. அப்பா ஆமில பெரிய உத்தியோகத்தில இருந்தவர், அவருக்கும் இது வந்தது.

மச்சான்  இது வெளியே வாறது, பிள்ளை பெறுவதைப் போன்றது - அவ்வளவு வேதனையாக இருக்கும், என்று லசந்த சொல்லி முடிக்கவும் அவன் செல்போன் சிணுங்கவும் சரியாயிருந்தது. கதைத்து முடித்ததும் சந்தோசமாய் தனது வேலை உறுதி செய்யப்பட்டதாய் சொன்னான்.

எல்லாம் கல் வந்த ராசி தான், உன் மோதிரத்தில் பதித்துக்கொள் இன்னம் சிறப்பாய் இருக்கும் என்று சொன்னேன். அப்படியா..? என்றானே ஆயிரம் வோல்ட் பல்ப்போடு.

No comments:

Post a Comment

இன்னும்